ykannan: July 2010

Saturday, July 3, 2010

பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் என்றாலும் இந்த முறை பெண்களுக்காக இதை கூறுகிறேன். இது வரை எழுதிய இடுகைகள் எதிலும் அவர்களுக்கு என்று தனியாக எதையும் எழுதியதில்லை, எனவே அதற்காக

உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.

சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

முதலில் குண்டாக இருப்பவர்கள்

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான். உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது, காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும். இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது. ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்

இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான் இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும், அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது.

பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும். எனவே இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.
ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.

நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள். இதற்க்கும் உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம். பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.
நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான். நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்த புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.


புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதை சரியான முறையில் கட்ட வேண்டும். என்னங்க நீங்க! எவ்வளவு வருசமாக புடவை கட்டுறேன் எனக்கு புடவை கட்டுறத பற்றி சொல்றீங்களே என்று கோபப்படாதீங்க. ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள், கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள் தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும், முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்து கட்டியது போல இருக்க கூடாது இது மாதிரி நிறைய இருக்கு.

முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது. அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தை தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது, எந்த உடையாக இருந்தாலும் நமக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது உடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும். இது வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட.

அன்புடன்

கண்ணன்

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா?

நான் பெண் அடிமை பற்றி பேசவில்லை மேல் நாட்டு நாகரீகம் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன்.நான் முற்று முழுதாக பெண்களை அடிமைப் படுத்துவதை எதிர்ப்பவன். பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொல்பவன். நான் பெண் அடிமை பற்றிப் பேசுகிறேன் என்று சொல்பவர்கள் எனது பதிவுகளைப் பாருங்கள் புரியும்.

ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது. அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைகள் நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவே. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்தால் அது மிருகங்கள் போன்றுதான் இருக்கும்.

இன்று மேல் நாட்டு நாகரீகம் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது. நான் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லை. ஆனால் எமது கலாசாரம் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கிறேன். சில மேல் நாட்டு நாகரீகங்களை ஏற்றுக்கொள்ளலாம். அந்த நாகரிகத்தின் தாக்கத்தினைப் பற்றி சிந்தியுங்கள்.

அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.


நாகரீக ஆடைகளை நாகரீக உலகுக்கு தகுந்தாற்போல் அணிய வேண்டும் . நான் இல்லை என்று சொல்லவில்லை. அரைகுறை ஆடை வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்த அரை குறை ஆடையினால் எத்தனை பிரட்சனை. அவர்களை பார்த்து யாராவது ஆண்கள் ஏதும் சொல்லிவிட்டால் ஆண்கள் மீது குற்றம் சுமத்தி விடுவார்கள். யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா . இல்லையே, அரை குறை ஆடை அணிபவர்களிடம் கேட்கின்றேன் நீங்கள் அணிந்திருப்பது எதற்கு அதனையும் அகற்றி விடலாமே.

பெண்களை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை இன்று இளைஞர்களும் வெளிநாட்டு நாகரீக மோகத்தினால் தானும் சீரழிந்து தனது சமுகத்தையும் சீரழிக்கின்றனர். போதைப்பொருள் பாவனை இன்று எந்தளவு அதிகரித்து இருக்கின்றது. இதனால் அவர்கள் மட்டுமா இந்தச் சமூகமுமே பாதிக்கப் படுகிறது. இது தேவையா?.

இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரங்களைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆனால் சில மேல் நாட்டுக் கலாசாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று மேல் நாட்டுக் கலாசாரம் ஏதோ ஒரு வகையில் அவசியமாகிவிட்டது. அதற்காக வேண்டப்படாத மேல் நாட்டு கலாசாரங்களை பின்பற்றுவதை கைவிடுங்கள் என்பதுதான் என் கருத்து.

இதனை பெண் அடிமை பேசுகிறேன் என்று சொல்லவேண்டாம். என்ன சொல்கிறேன் என்பதனை புரிந்து கொண்டு விவாதியுங்கள்.
இதுபோன்ற தேவையற்ற மேல் நாட்டுக் கலாசாரங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வாரட்டுமே...

உங்கள் விவாதங்கள் வெறுமனே பொழுது போக்குக்கான விவாதமாக இல்லாமல் மாற்றுக் கருத்துக்களுக்கு தீர்வு கிடைக்கின்ற விவாதங்களாக அமையட்டும்.

அன்புடன்

கண்ணன்

Aeroscraft விண்கப்பல்

மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி என்றுமே முற்றுப்பெற்றதில்லை. தொடர்ச்சியான அறிவியற் தேடலின் மூலமாகவே மனிதகுலம் இன்றைய நவீன அறிவியல் உலகத்தை அடைந்துள்ளது. அந்த முற்றுப்பெறாத அறிவியற் தேடலின் கண்டுபிடிப்புக்களில் ஒன்றே Aeroscraft விண்கப்பல் ஆகும்.

மிகவிரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த Aeroscraft ஆனது, ஒரு கனரக விண்கப்பல் ஆகும். மின்சார இயந்திரத்தின் மூலம் இயங்கும் இந்தக் கனரக விண்கப்பல் இருநூற்றைம்பது வரையான பயணிகளையோ அல்லது 400 தொன் வரையான சரக்குகளையோ காவிச்செல்ல வல்லது. இது சாதாரண விண்கப்பல் (airship) ஒன்றைப்போன்று ஓடுபாதை இல்லாது மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. சாதாரண விண்கப்பல் ஒன்றைப்போன்று இதன் விண்ணில் பறப்பதற்கான தூக்குவிசை ஹீலியம் வாயுவின் மூலம் உருவாக்கப்பட்டாலும், விமானம் போன்ற இதனது உடற்பகுதியின் வடிவமும் இதற்கான தூக்கு விசையை வழங்குகின்றது.

தேவையான மொத்தத் தூக்குவிசையின் அறுபது வீதமான பகுதி ஹீலியம் வாயுவினாலும் மீதி தூக்குவிசை இவ்வான் கப்பலின் உடற்பகுதி மற்றும் இறக்கையமைப்புக்கள் போன்றவற்றில் தாக்கும் காற்றியக்க விசையின் மூலமாகவும் வழங்கப்படுகின்றது.

1930 களின் பிற்பகுதியில் Hindenburg எனப்பட்ட வான்கப்பல் விபத்தைத் தொடர்ந்து, வான்கப்பல் மூலமான பயணிகள் போக்குவரத்து முடிவிற்கு வந்தது. அதன்பின்னர், இலகுரக வான்கப்பல்கள், விளம்பரப் பதாகைகள் பறக்கவிடல் மற்றும் தொலைக்காட்சிப் படப்பிடிப்பு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், போக்குவரத்துப் பயன்பாடுகளில் வான்கப்பல்களை ஈடுபடுத்துவதில் தயக்கம் நிலவி வந்தது. பல்வேறு நிறுவனங்கள் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான வான்கப்பல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்த போதிலும், Worldwide Aeros நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுவரும் இந்த Aeroscraft எனப்படும் வான்கப்பலே பலரதும் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண வான்கப்பல் ஒன்று ஹீலியம் அல்லது ஐதரசன் வாயுவினால் நிரப்பப்படும் போது அது வளியில் மிதக்கின்றது. இவ்வாறு ஹீலியம் அல்லது ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட வான்கப்பல் வளியில் மிதப்பதன் aeroscraft-diagramஅடிப்படைத் தத்துவம் மிகவும் எளிதானது. அதாவது அடர்த்தி குறைந்த வளியினால் நிரப்பப்படும் வான்கப்பல், அடர்த்தி கூடிய வளியில் மிதக்கின்றது. அதேபோன்று, இந்த Aeroscraft வான்கப்பலுக்கான மிதப்பு விசையின் 60 வீதமான மிதப்பு விசை, வாக்கப்பலினுள் நிரப்பப்படும் 14 மில்லியன் சதுர அடி கனவளவுடைய ஹீலியம் வாயுவினால் வழங்கப்படுவதுடன், மீதி மிதப்பு விசையானது, அது முன்னோக்கி நகரும்போது அதன் முன் மற்றும் பின் புறங்களில் அமைந்துள்ள இறக்கைகளின் மேற்பரப்புக்களில் ஏற்படுத்தப்படும் காற்றியக்க விசையின் காரணமாக உருவாக்கப்படுகின்றது.

165 அடி உயரம், 244 அடி அகலம் மற்றும் 647 அடி நீளமுடைய இந்த Aeroscraft வான்கப்பல் 400 தொன் நிறையுடன் மணிக்கு 174 மைல் வேகத்தில் 6000 மைல்கள் தொலைவிற்குப் பறக்கவல்லது.

இந்த Aeroscraft வான்கப்பலானது நான்கு சுழலிக்காற்றாடி (turbofan) இயந்திரங்களின் உதவியுடன் நிலைக்குத்தாக மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. நிலைக்குத்தாக மேலெழுந்து அதன் பறப்பு உயரமான 8000 அடி உயரத்தை அடைந்ததும், ஐதரசன் மின்கலங்களின் மூலம் இயக்கப்படும் மின்னியந்திரச் சுழலிகள் இயக்கப்பட்டு விண்கப்பல் முன்நோக்கி நகரும். இவ்வாஞ மின்னியந்திரங்களின் மூலம் இயக்கப்படுவதன் காரணமாக இவ்விண்கப்பல்கள் பாரியளவில் ஒலியெழுப்புவதில்லை.

இதன் முழுமையாக கட்டுப்பாட்டுத் தொகுதிகளுக்குமான கட்டளைகள் ஒளியிழை வடங்களினூடாகவே (optical cable) பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒளியிழை வடங்களின் மூலம் தகவற் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் Fly-by-Light (FBL) என்றழைக்கப்படுகின்றன. மின்கம்பி வடங்களைப் பயன்படுத்தும்போது பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியில் ஏற்படும் மின்காந்தப்புலக் குறுக்கீடு, அவடவாறான குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக மின்கம்பி வடங்களுக்கு இடப்படும் மேலதிக காப்புறைகளினால் ஏற்படும் நிறை அதிகரிப்பு என்பவற்றைத் தவிர்ப்பதற்காகவே, இவ்வான் கப்பலின் பறப்புக்ட்டுப்பாட்டுத் தொகுதியில் ஒளியிழை வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விண்கப்பலின் பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியிலுள்ள அனைத்துச் செயற்பாடுகளும் தன்னியக்கமாகவே நடைபெறுகின்றன. இருப்பினும், விமானிகள் இருவரும், அவசர நிலைகளைக் கையாளுதல் மற்றும் கப்பலின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, இத்தனினியக்கச் செயற்பாடுகளைக் கண்காணித்தவண்ணமிருப்பர்.

பெரும்பாலும் இவ்வருடம் (2010) பரிசோதனை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விண்கப்பல் அதிக கொள்ளளவு காவுதிறனுடன் காணப்படுவதன் காரணமாக, இராணுவ மற்றும் பொதுப்பயன்பாட்டு வழங்கல் (supply) பணிகளுக்கு உகந்ததாகக் காணப்படுகின்றது. அதுதவிர அவசரகால மீட்புப்பணி மற்றும் தீயணைப்புப் பணி போன்றவற்றிற்கும் இதன் பயன்பாடு பெரிதும் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரண விமானங்களை விட 30 வீதம் குறைவான உற்பத்திச் செலவும் 50 வீதம் குறைவான பராமரிப்புச் செலவும் கொண்ட இந்த விண்கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பல்வேறுபட்ட துறைகளில் இடம்பிடித்து மனிதனுக்கு பல்வேறு வகைளில் நன்மையளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்

கண்ணன்

உடல் எடையை குறைக்க எளிய வழிகள்


உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான்.
உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு.



இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்பவர்களா நீங்கள்? பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப் போகிறோம்.




முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான்.




இனி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

1. எதிர்மறைக்(negetive) கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்:

பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம்.
இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.

நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உடலில் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப் படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம்.

பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உடலின் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல் / சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது.

ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப் படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உடலில் சேமிக்கப் பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப் படுகிறது.

பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு(cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கிழங்கு(asparagus), பீட்ரூட் முதலியன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முதலியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.

பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை. நிறையவே எடைக்குறைப்பு செய்ய வாழ்த்துக்கள்.

அன்புடன்

கண்ணன்

கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???


மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.


1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.

அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.

ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.

இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.

ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.

உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.


6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

அன்புடன்

கண்ணன்

சட்டைப் பட்டனில் யாருக்கும் தெரியாத கேமிரா…


இந்த தொழில்நுட்ப காலத்தில் தினமும் ஒரு கண்டுபிடிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது

அந்த வகையில் இப்போது சட்டைப்பட்டனில் மறைந்திருக்கும் கேமிரா வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.

நாம் அணியும் சட்டையில் பட்டனை எடுத்துவிட்டு அதற்கு பதில் கேமிரா பட்டனை வைத்துவிடுகின்றனர் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சில முக்கியமான அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை யாரும் தெரியாத வண்ணம் படம் பிடித்துவிடுகின்றனர்.

இந்த கேமிரா மூலம் 720×480 பிக்சல் அளவு காட்சிகளை படமெடுக்க முடியும் ஒரு செகண்டுக்கு 30 பிரேம் என்ற வகையில் உள்ளது, தொடர்ச்சியாக 70 நிமிடம் வரை படம் பிடிக்க முடியும். 16GB மெமரியுடன் இந்த கேமிரா வெளிவந்துள்ளது, இந்த கேமிராவில் நாம் சேமிப்பதை உடனடியாக USB கேபிள் மூலம் கணினியில் ஏற்றலாம். இந்த கேமிரா பட்டன் எப்படி இருக்கும் என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளோம்.

ஒரு உயர்நிலை அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடப்பதையும் கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுவதியும் இனி மறைவாக எடுக்கலாம் என்று இதன் வெளியீட்டு விழாவில் பலர் கூறியிருந்தனர். செய்தி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

என்ன தான் நல்லதிற்காக பயன்படுத்தினாலும் இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் அதனால் நாம் எப்போதும் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம்.

Friday, July 2, 2010

உலகின் மிக நீளமான "மியாமி கடற்கரை" - அட்டகாசமான புகைப்படங்கள்...



















அன்புடன்

கண்ணன்

தாலிக்கு அர்த்தம் என்ன?

திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

தாலியின் இலைகள்:
1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
2)மேண்மை பெற வேண்டும்
3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
4)தூய்மை அவசியம் வேண்டும்
5)தெய்வீகம் தேவை
6)உத்தம குணம் தேவை
7)விவேகம் முக்கியம்
8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி


வாழ்க வளமுடன்

அன்புடன்

கண்ணன்

உடை குறைப்பது தான் நாகரீகமா?



இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.


நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.


ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

அன்புடன்

கண்ணன்

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?

லண்டனில் இருந்து வந்த அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அங்க என்ன Internet Connection வச்சுரிக்கிங்க' என கேட்க, அவர் சொன்னார், 'எதுவுமில்லை லேப்டாப்பை எடுத்துட்டு போறம், ஏறக்குறைய எல்லா இடங்களிலும், யாராவது ஒருவர் இணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்கள், அதில் நான் WiFi மூலமாக connect செய்து கொள்வேன்' என்றார்.

யோசித்து பார்த்த பொழுது, இப்படி நாமும் ஒரு வயர்லெஸ் இணைய கணக்கு வைத்திருக்கிறோமே, நம்முடைய கணக்கில், பக்கத்து அறையிலோ, பக்கத்து வீட்டிலோ, யாரும் நுழைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

இப்பொழுத்தான், எல்லா மடிகணினிகளிலும், WiFi இருக்கிறது, நம்முடைய ரூட்டர்/ மோடம் இணையத்தில் தொடர்பில் இருக்கும் பொழுது, லேப்டாப்பை ஆன் செய்தாலே போதுமானது.

இப்படி நமது இணைய கணக்கில் நம்மைத் தவிர வேறு யாரும் நுழையாதவாறு, பாதுகாப்பது எப்படி?

இங்கே நான் விவரித்திருப்பது 'Linksys WRT54GS' ரூட்டரில் இதை எப்படி செய்வது எனபது குறித்து. உங்களுடைய மோடம் / ரூட்டர் க்கு தகுந்தாற்போல ஒரு சில ஆப்ஷன்கள் மாறலாம்.

முதலில் உங்கள் ரூட்டருக்கு கடவு சொல்லை அவ்வப்பொழுது மாற்றுங்கள்.

இதற்கு, ரூட்டரில் லாகின் ஆக வேண்டும்.

உங்கள் உலவியை திறந்து கொண்டு, அதன் அட்ரஸ் பாரில் 192.168.1.1 என்ற ஐபி அட்ரசை டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது வரும் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுங்கள். (இணைய கணக்கின் பயனர்/கடவுசொல் அல்ல. ரூட்டருடையது வழக்கமாக பல ரூட்டர்களின் default பயனர் பெயர் admin கடவு சொல்லும் admin என்பதாகவே இருக்கும்.

பிறகு Administration -> Management சென்று Router Password மற்றும் Re-enter to confirm field களில் கடவு சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.

இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்.

ஒவ்வொரு Ethernet Adapter க்கும், அதற்கான 12 இலக்க Unique Identifier உண்டு. இதனை MAC Address என அழைக்கிறோம். (MAC - Media Access Control) இதனை அடிப்படையாக கொண்டுதான் அனைத்து நெட்வொர்க் களும் ஒரு குறிப்பிட்ட கணினியை நெட்வொர்க்கில் அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறது.

நமது கணினிக்கான MAC Address ஐ கண்டறிய,

Start > Run. சென்று cmd என டைப் செய்து என்டர் கொடுங்கள். இனி திறக்கும் command prompt இல் ipconfig /all. என டைப் செய்து என்டர் கொடுங்கள். பிறகு திரையில் Ethernet Adapter Wireless Network Connection. என்ற பகுதியில் மூன்றாவதாக Physical Address. என்பதற்கு நேராக இருக்கும் MAC அட்ரசை குறித்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக 00-A0-C9-14-C8-29)

இனி உங்கள் ரூட்டர் மெனுவில் Wireless > MAC Address > Wireless Mac Filter. சென்று Enable என்பதை கிளிக் செய்து Permit only PCs listed to access the wireless network option, மற்றும் Edit MAC Filter என்ற List button ஐ கிளிக் செய்து, நீங்கள் குறித்து வைத்துள்ள MAC Address ஐ டைப் செய்யுங்கள். பிறகு சேமித்துக் கொள்ளுங்கள்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த எந்த கணினிகளின் MAC address களை கொடுக்கிறீர்களோ, அந்த கணினிகளை தவிர வேறு கணினிகள் மூலமாக வயர்லெஸ் தொடர்பை உருவாக்க முடியாது.

அன்புடன்

கண்ணன்